டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர்.

பஞ்சாப் மாநிலம்

  • அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
  • வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள், அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வீதிகளை நோக்கி ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் நள்ளிரவு வரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லி

  • பஞ்சாப்பை போல் தலைநகர் டெல்லியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
  • மேலும் ஹரியானா, உத்தராகண்ட் , இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.